நேசமாகி நினை மட நெஞ்சமே




திருச்சிற்றம்பலம்

கோனைக் காவிக் குளிர்ந்த மனத்தராய்த்
தேனைக் காவியுண் ணார்சில தெண்ணர்கள்
ஆனைக் காவிலம் மானை யணைகிலார்
ஊனைக் காவி யுழிதர்வ ரூமரே

திருகு சிந்தையைத் தீர்த்துச்செம் மைசெய்து
பருகி யூறலைப் பற்றிப் பதமறிந்
துருகி நைபவர்க் கூனமொன் றின்றியே
அருகு நின்றிடும் ஆனைக்கா வண்ணலே

துன்ப மின்றித் துயரின்றி யென்று நீர்
இன்பம் வேண்டி லிராப்பக லேத்துமின்
என்பொன் ஈச னிறைவனென் றுள்குவார்க்
கன்ப னாயிடும் ஆனைக்கா வண்ணலே

நாவால்நன்று நறுமலர்ச் சேவடி
ஓவா தேத்தி யுளத்தடைத் தார்வினை
காவா யென்றுதங் கைதொழு வார்க்கெலாம்
ஆவா என்றிடும் ஆனைக்கா வண்ணலே

வஞ்ச மின்றி வணங்குமின் வைகலும்
வெஞ்சொ லின்றி விலகுமின் வீடுற
நைஞ்சு நைஞ்சுநின் றுள்குளிர் வார்க்கெலாம்
அஞ்ச லென்றிடும் ஆனைக்கா வண்ணலே

நடையை மெய்யென்று நாத்திகம் பேசாதே
படைகள் போல்வரும் பஞ்சமா பூதங்கள்
தடையொன் றின்றியே தன்னடைந் தார்க்கெலாம்
அடைய நின்றிடும் ஆனைக்கா வண்ணலே.

ஒழுகு மாடத்து ளொன்பது வாய்தலுங்
கழுக ரிப்பதன் முன்னங் கழலடி
தொழுது கைகளால் தூமலர் தூவிநின்
றழும வர்க்கன்ப னானைக்கா வண்ணலே

உருளும் போதறி வொண்ணா வுலகத்தீர்
தெருளுஞ் சிக்கெனத் தீவினை சேராதே
இருள றுத்தநின் றீசனென் பார்க்கெலாம்
அருள்கொ டுத்திடும் ஆனைக்கா வண்ணலே.

நேச மாகி நினைமட நெஞ்சமே
நாச மாய குலநலஞ் சுற்றங்கள்
பாச மற்றுப் பராபர வானந்த
ஆசை யுற்றிடும் ஆனைக்கா வண்ணலே

ஓத மாகடல் சூழிலங் கைக்கிறை
கீதங் கின்னரம் பாடக் கெழுவினான்
பாதம் வாங்கிப் பரிந்தருள் செய்தங்கோர்
ஆதி யாயிடும் ஆனைக்கா வண்ணலே

திருச்சிற்றம்பலம்

-திருநாவுக்கரசு சுவாமிகள்


0 comments:

Post a Comment