தந்தை தாய் உலகுக்கோர் தத்துவன் மெய்த் தவத்தோர்க்குப் பந்தமாயின பெருமான்



குபேர லிங்கேஸ்வரர்
திருவானைக் காவல்

திருச்சிற்றம்பலம்


மறைக ளாயின நான்கும் 
மற்றுள பொருள்களும் எல்லாத்
துறையும் தோத்திரத் திறையும் 
தொன்மையும் நன்மையும் ஆய
அறையும் பூம்புனல் ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
இறைவன் என்றடி சேர்வார்
எம்மையும் ஆளுடை யாரே.

வங்கம் மேவிய வேலை
நஞ்செழ வஞ்சர்கள் கூடித்
தங்கள் மேல்அட ராமை
உண்ணென உண்டிருள் கண்டன்
அங்கம் ஓதிய ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
எங்கள் ஈசன்என் பார்கள்
எம்மையும் ஆளுடை யாரே

நீல வண்டறை கொன்றை
நேரிழை மங்கை ஓர்திங்கள்
சால வாள்அர வங்கள்
தங்கிய செஞ்சடை எந்தை
ஆல நீழலுள் ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
ஏலு மாறுவல் லார்கள்
எம்மையும் ஆளுடை யாரே

தந்தை தாய்உல குக்கோர்
தத்துவன் மெய்த்தவத் தோர்க்குப்
பந்த மாயின பெருமான்
பரிசுடை யவர்திரு வடிகள்
அந்தண் பூம்புனல் ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
எந்தை என்றடி சேர்வார்
எம்மையும் ஆளுடை யாரே

கணைசெந் தீஅர வம்நாண்
கல்வளை யுஞ்சிலை யாகத்
துணைசெ யும்மதில் மூன்றுஞ்
சுட்டவ னேயுல குய்ய
அணையும் பூம்புனல் ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
இணைகொள் சேவடி சேர்வார்
எம்மையும் ஆளுடை யாரே

விண்ணின் மாமதி சூடி
விலையிலி கலனணி விமலன்
பண்ணின் நேர்மொழி மங்கை
பங்கினன் பசுவுகந் தேறி
அண்ண லாகிய ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
எண்ணு மாறுவல் லார்கள்
எம்மையும் ஆளுடை யாரே

தார மாகிய பொன்னித்
தண்டுறை ஆடி விழுத்து
நீரில் நின்றடி போற்றி
நின்மலா கொள்ளென ஆங்கே 
ஆரங் கொண்டஎம் ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
ஈரம் உள்ளவர் நாளும்
எம்மையும் ஆளுடை யாரே

உரவம் உள்ளதொர் உழையின்
உரிபுலி யதள்உடை யானை
விரைகொள் கொன்றையி னானை
விரிசடை மேற்பிறை யானை
அரவம் வீக்கிய ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
இரவும் எல்லையும் ஏத்து
வார்எம்மை ஆளுடை யாரே

வலங்கொள் வாரவர் தங்கள்
வல்வினை தீர்க்கு மருந்து
கலங்கக் காலனைக் காலாற்
காமனைக் கண்சிவப் பானை
அலங்கல் நீர்பொரும் ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
இலங்கு சேவடி சேர்வார்
எம்மையும் ஆளுடை யாரே

ஆழி யாற்கருள் ஆனைக்
காவுடை ஆதிபொன் னடியின்
நீழ லேசர ணாக
நின்றருள் கூர நினைந்து
வாழ வல்லவன் றொண்டன்
வண்டமிழ் மாலைவல் லார்போய்
ஏழு மாபிறப் பற்று
எம்மையும் ஆளுடை யாரே

திருச்சிற்றம்பலம்

-சுந்தரமூர்த்தி சுவாமிகள்

0 comments:

Post a Comment